<<>>உணவு மழைத் தீவு! -4.<<>>(சிறுவர் தொடர் கதை )

ஒரு நாள் மாலை !
இரவு உணவு என்ன?
என்பதை அறிய எல்லோரும் அவரவர் வீட்டு டி.வி.
முன்பாக அமர்ந்திருந்தனர். அப்போது வானிலை அறிவிப்பாளர் சொன்ன
செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்தது.
" இன்று இரவு நம் தீவை பலத்த உணவுப் புயல் தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு இரவு உணவாக ரவாதோசை, இட்லி , பூரி , சப்பாத்தி , சாம்பார் சாதம் ஒவ்வொன்றும் தலா ஆறு நிமிடங்களும் தொடர்ந்து தேங்காய் சட்னி , தக்காளிச் சட்னி, கொத்தமல்லி சட்னி , சாம்பார் தலா இரண்டிரண்டு நிமிடங்களும் பொழியும். அப்போது காற்று எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள், தங்களுக்கு இரண்டு நாளைக்குத் தேவையான உணவைச் சேகரித்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இரவு 7.30 மணிக்கு வானிலை மிக மோசமான நிலையை அடையும். எனவே பொது மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாமென்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
சுழன்று வீசும் சுறாவளிக்காற்று புயலாக மாறி இடி மின்னலுடன் உணவு மழை பெய்யும் . மின்னலால் தாக்கப்பட்டு உணவுப்பொருள்கள் சாப்பிட இயலாதவண்ணம் கருகிப் போய் வந்து விழும். சில சமயம் ஆடு,கோழி இறைச்சிகள் அப்படியே சமைக்கப்படாமல் முழுதாக கீழே விழ நேரிடலாம்.
இதனால் வீடுகள் சேதமடைய நேரிடலாம். பொதுமக்கள் தற்காப்பு கருதி அவரவர் வீடுகளில் உள்ள பாதாள அறைகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று இரவு எட்டு மணிக்குள் எல்லோரும் பாதாள அறைக்குச் சென்று விட வேண்டும்.
பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் இப்போதே பாதாள அறைக்கு எடுத்துச் சென்று வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தீவில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஒருவாரகாலத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீவில் உள்ள பொதுமக்கள் எந்த நேரமும் பொதுச் சேவைக்கு அழைக்கப்படும்போது வரத் தயாராக இருக்கவேண்டும் என்று தீவு நிர்வாக அதிகாரி அறிவிக்கிறார்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை பதாள அறையை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப் படுகிறர்கள் " என்று அறிவிப்பாளர் சொல்லி முடித்ததும் அந்தத் தீவு பொதுமக்களை பயமும் பீதியும் ஒருங்கே கவ்விக்கொண்டது.
உலகத்தில் உணவுக்காகத்தான், அத்தனை பாடும் படுகிறார்கள். இங்கே தேவையான உணவு கிடைத்தும் சமயாசமயத்தில் இப்படி ஆகிவிடுகிறதே என்று மிகுந்த கவலை கொண்டனர்.
அந்தத் தீவு மக்கள் எல்லோரும் அடுத்த சில நிமிடங்களுக்குள் பரபரப்பாகிவிட்டனர். பெரியவர்கள் கவலைப் பட்டனர். கடும் வேகத்தில் வந்து விழுந்து வீட்டுக் கூரை போய்விட்டால் என்ன செய்வது? அல்லது வீடே இடிந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது? என்ற கவலைகளில் மூழ்கிப் போய்விட்டனர். சிறுவர் சிறுமிகளுக்கோ பாதாள அறை வாசத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். சிலர், தாங்கள் பள்ளிக்கு போக முடியாதே என்று கவலைப்பட்டனர்.
சிறுவர் சிறுமியர் உட்பட அனைவரும் இரண்டு மூன்று நாளைக்குத் தேவையான உணவை சேகரித்து வைத்துக்கொள்ள கைகளில் பாத்திரங்களோடு தயாராக நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது.....
இன்னும் பொழியும்.....!

0 Comments:
Post a Comment
<< Home