<>உணவு மழைத் தீவு : 11 :சிறுவர் தொடர் கதை <>
"முன் எப்போதும் இல்லாத அளவில் இன்று பிற்பகலுக்கு மேல் உணவுப் புயல் வீசும். இதனால் தீவு பலத்த சேதத்துக்குஉள்ளாகக்கூடும் என்று தெரிகிறது. பிற்பகலுக்கு முன்பாக தங்கள் உணவுகளைச் சேகரித்துக்கொண்டு அடுத்த அறிவிப்பு வரும்வரை பாதாள அறைகளில் தங்கி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொழியும் உணவுகளில்முட்டைகள், தோசை, இட்லிகள் சாதாரண அளவைப் போன்று பலமடங்கு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தக்காளி போன்றவை உடைந்து தக்காளிச் சாறாகக் கொட்டும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இது குறித்த செய்திகள் அடுத்த 30 நிமிடங்களில் விரிவாக இடம்பெறும் என்று அறிவிப்பாளர் சொன்னார். செய்தியைக் கேட்ட உணவு மழைத் தீவு மக்கள் மிகுந்த சோகத்துக்குள்ளாகினர். சமீபத்தில்தான் பெருத்த சேதம் ஏற்பட்டது.
அதிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் மீண்டும் பெருத்த சேதம் என்பதால் கவலைகொண்டனர்.குழந்தைகள் எல்லோரும் சோகமயமாய் திகழ்ந்தனர். எப்போதாவது பாதாள அறையில் இருக்க நேர்ந்தால் பரவாயில்லை. அடிக்கடி பாதாள அறைக்கு வருவதை சிறார் விரும்பவில்லை. இருட்டறையில் அடைக்கப்படுவதாக எண்ணினர்.பெரியவர்கள் தொலைபேசியில் இந்த உணவுப் புயலை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்று பேசிக்கொண்டனர். சிலர்,"இந்த உணவுமழைத் தீவை விட்டு வெளியேறும் காலம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்," என்று பேசிக்கொண்டனர்.
சிலர் இந்த பூமியை விட்டு வேறு கிரகம் எதுக்காவது போக முடிந்தால் நல்லது என்று பேசிக்கொண்டனர்.உணவுமழைத் தீவைத் தாக்கப் போகும் புயல் எப்படிப்பட்டதாக இருக்கும்? எவராவது இதை தடுத்து நிறுத்தும் உபாயம் கண்டுபிடித்தால் என்ன? இப்படிப் பலவாறாகப் பேசிக்கொண்டனர். மக்கள் அனைவரும் சோகமயமாயிருந்தனர்.அப்போது தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை அடுத்த சில நொடிகளில் ஆரம்பமாகும் என்ற அறிவிப்பு கேட்டது. எல்லோரும் தொலைக்காட்சிப் பெட்டியை நெருங்கி என்ன சொல்லப் போகிறார் அறிவிப்பாளர் என்பதைக் கேட்கத் தயாரானார்கள்.
இன்னும் பொழியும்....!