KathaiKathaiyaam

Friday, February 29, 2008

<<>>உணவு மழைத் தீவு! -5.<<>>(சிறுவர் தொடர் கதை )









சிறுவர் சிறுமிகளுக்கோ
பாதாள அறை வாசத்தை
எண்ணி மகிழ்ச்சி
அடைந்தனர்.
சிலர்,
தாங்கள் பள்ளிக்கு போக முடியாதே என்று
கவலைப்பட்டனர்.

சிறுவர் சிறுமியர் உட்பட அனைவரும் இரண்டு
மூன்று நாளைக்குத் தேவையான உணவை
சேகரித்து வைத்துக்கொள்ள கைகளில் பாத்திரங்களோடு
தயாராக நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது.....

மாலை மணி ஆறு முப்பது. இரவு உணவாக ரவாதோசை, இட்லி , பூரி , சப்பாத்தி , சாம்பார் சாதம் என்று பொழிய ஆரம்பித்தது. எல்லோரும் முடிந்தவரை சேகரித்தார்கள்; சிறிது நேரத்தில் சட்னி மழை பொழிய அதையும் பாத்திரங்களில் பிடித்து பத்திரமாக பாதாள அறைக்கு கொண்டுபோய் வைத்தனர். சிலர் ஒரு வாரத்திற்கு போதுமான உணவைச் சேகரித்து வைத்துக்கொண்டனர். அடுத்த ஓரிரு நாட்கள் எப்படியிருக்குமோ என்ற அச்சத்தில் பலர் இருந்தனர். சிறுவர் சிறுமியர் பாடுதான் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ஒரு வழியாக எல்லோரும் பாதாள அறை வாழ்க்கைக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருந்தபோதுதான் வீடே அதிரும்படியான சத்தம் கேட்டது.

எல்லோரும் பாதாள அறைகளில் இருந்ததால் சத்தம் கூடுதலாகவே கேட்டது. பாதாள அறையிலிருந்த தொலைக்காட்சித் திரையில் எல்லோரின் விழிகளும் பதிந்து கிடந்தது; வானிலை அறிவிப்பாளர் வார்த்தைக்கு வார்த்தை எச்சரிக்கை, பாதுகாப்பு , வெளியே வராதீர்கள் என்று சொல்லி எல்லோர் வயிற்றிலும் புளியைக் கரைத்துக்கொண்டிருந்தார்.

திடீர் திடீர் என மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது வீட்டிலிருந்த சிறுசுகளுக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியது. வீட்டிலிருந்த பெரியவர்கள் மெழுகுவர்த்திகளை தயாராக எடுத்து வைத்துக் கொண்டனர். குழந்தைகளை சாப்பிட்டுவிட்டுத் தூங்கவைத்தனர். வெளியே தீபாவளிப் பட்டாசு வெடி ஓசைகள் போல பட், தட், தடார் என்று வெவ்வேறு ஓசைகள் இடைவெளியின்றி கேட்டவண்ணமிருந்தன;

நேரம் ஆக, ஆக பெரியவர்களுக்கும் தூக்கம் கண்களைச் சுழற்ற உட்கார்ந்த நிலையிலும், சோபாவில் சாய்ந்த நிலையிலும் தூங்கத் துவங்கியிருந்தனர். சிலர் தூக்கம் வராமல் இருக்க தேனீர் கோப்பைகளை கைகளில் எடுத்துக் கொண்டு அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தனர். சிலர் நண்பர்கள், உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் கவலைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தனர்.

திடீரென்று மின் தொடர்பு அறுந்தது. வானமே பெயர்ந்து பூமியில் விழுந்தது போல ஒரு பெரும் ஓசை தூங்கிக் கொண்டிருந்தவர்களை துள்ளி எழச் செய்தது. மெழுகுவர்த்திகள் ஒளி நடனம் புரிய, காரிருள், இரைச்சல், சில்லென்று விழுந்து உடையும் கண்ணாடிகள் எழுப்பும் சத்தம் எல்லாம் கலவையாய் அவர்களின் காதுகளில் விழுந்து இருதயக் கூட்டுக்குள் பொங்கிய அச்சம் முகங்களில் தெரிந்தது.

வீடுகளின் உச்சியில் யாரோ பாறாங்கல்லை உருட்டி விட்டது போல கடகடவென விழுந்து உருளும் சத்தமும் தொடர்ந்து வீட்டுக்கூரை சடசடவென முறிந்து விழும் ஓசையும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைக்கூட எழுப்பிவிட்டது. எழுந்த குழந்தைகள் மிரண்டுபோய் அப்பா, அம்மாக்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ள, உணவு மழைத் தீவில் இருந்த அத்தனை பேரும் உயிர் பிழைப்போமா என்ற அச்சத்தை விதைத்திருந்தது.

அவர்கள் அச்சப்பட்டது போலவே, மறுநாள் பொழுது விடிந்தபோது.....

இன்னும் பொழியும்.....!



<<>>உணவு மழைத் தீவு! -4.<<>>(சிறுவர் தொடர் கதை )


ஒரு நாள் மாலை !
இரவு உணவு என்ன?
என்பதை அறிய எல்லோரும் அவரவர் வீட்டு டி.வி.
முன்பாக அமர்ந்திருந்தனர். அப்போது வானிலை அறிவிப்பாளர் சொன்ன
செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்தது.
" இன்று இரவு நம் தீவை பலத்த உணவுப் புயல் தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு இரவு உணவாக ரவாதோசை, இட்லி , பூரி , சப்பாத்தி , சாம்பார் சாதம் ஒவ்வொன்றும் தலா ஆறு நிமிடங்களும் தொடர்ந்து தேங்காய் சட்னி , தக்காளிச் சட்னி, கொத்தமல்லி சட்னி , சாம்பார் தலா இரண்டிரண்டு நிமிடங்களும் பொழியும். அப்போது காற்று எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள், தங்களுக்கு இரண்டு நாளைக்குத் தேவையான உணவைச் சேகரித்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இரவு 7.30 மணிக்கு வானிலை மிக மோசமான நிலையை அடையும். எனவே பொது மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாமென்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
சுழன்று வீசும் சுறாவளிக்காற்று புயலாக மாறி இடி மின்னலுடன் உணவு மழை பெய்யும் . மின்னலால் தாக்கப்பட்டு உணவுப்பொருள்கள் சாப்பிட இயலாதவண்ணம் கருகிப் போய் வந்து விழும். சில சமயம் ஆடு,கோழி இறைச்சிகள் அப்படியே சமைக்கப்படாமல் முழுதாக கீழே விழ நேரிடலாம்.
இதனால் வீடுகள் சேதமடைய நேரிடலாம். பொதுமக்கள் தற்காப்பு கருதி அவரவர் வீடுகளில் உள்ள பாதாள அறைகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று இரவு எட்டு மணிக்குள் எல்லோரும் பாதாள அறைக்குச் சென்று விட வேண்டும்.
பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் இப்போதே பாதாள அறைக்கு எடுத்துச் சென்று வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தீவில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஒருவாரகாலத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீவில் உள்ள பொதுமக்கள் எந்த நேரமும் பொதுச் சேவைக்கு அழைக்கப்படும்போது வரத் தயாராக இருக்கவேண்டும் என்று தீவு நிர்வாக அதிகாரி அறிவிக்கிறார்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை பதாள அறையை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப் படுகிறர்கள் " என்று அறிவிப்பாளர் சொல்லி முடித்ததும் அந்தத் தீவு பொதுமக்களை பயமும் பீதியும் ஒருங்கே கவ்விக்கொண்டது.
உலகத்தில் உணவுக்காகத்தான், அத்தனை பாடும் படுகிறார்கள். இங்கே தேவையான உணவு கிடைத்தும் சமயாசமயத்தில் இப்படி ஆகிவிடுகிறதே என்று மிகுந்த கவலை கொண்டனர்.
அந்தத் தீவு மக்கள் எல்லோரும் அடுத்த சில நிமிடங்களுக்குள் பரபரப்பாகிவிட்டனர். பெரியவர்கள் கவலைப் பட்டனர். கடும் வேகத்தில் வந்து விழுந்து வீட்டுக் கூரை போய்விட்டால் என்ன செய்வது? அல்லது வீடே இடிந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது? என்ற கவலைகளில் மூழ்கிப் போய்விட்டனர். சிறுவர் சிறுமிகளுக்கோ பாதாள அறை வாசத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். சிலர், தாங்கள் பள்ளிக்கு போக முடியாதே என்று கவலைப்பட்டனர்.
சிறுவர் சிறுமியர் உட்பட அனைவரும் இரண்டு மூன்று நாளைக்குத் தேவையான உணவை சேகரித்து வைத்துக்கொள்ள கைகளில் பாத்திரங்களோடு தயாராக நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது.....

இன்னும் பொழியும்.....!

<<>>உணவு மழைத் தீவு! -3.<<>>(சிறுவர் தொடர் கதை )




மக்கள் தங்கள் தேவைக்கு மேல் கொஞ்சம் கூடுதலா
எடுத்து வந்து... இல்லை, இல்லை பாத்திரங்களில் பிடித்து
வந்து வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள்.
எதிர்பாராதவிதமாக புயல், சூறாவளி அடித்தால்
மக்களால் வீட்டுக்கு வெளியே வந்து உணவுப் பதார்த்தங்களை
சேகரிக்க முடியாமல் போகும்.

அதனால்ஒருவேளை அல்லது இரண்டு வேளை உணவு எப்போதும்
எல்லார் வீடுகளிலும் தயாரா இருந்து கொண்டே இருக்கும்!
இந்த நகரத்துல ஒரு உணவுவிடுதிகூட கிடையாது. அதற்கான அவசியமும் இல்லையல்லவா? அதனால்தான்
அவர்கள் அப்படி சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள், என்றார் தாத்தா.
உடனே ரவிக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள்ளாம் வாங்குறதுக்குக் கூட கடைகள்
கிடையாதா? தாத்தா என்று கேட்டான்.
" தாத்தா சொல்லுவாங்கடா, அதுக்குள்ள முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக்கிட்டு கேக்காதே " என்றாள் நிகிலா.
" சரி... சரி சின்னப் பையந்தானேம்மா, " என்ற தாத்தா, " மிட்டாய், பிஸ்கெட்டுகள், ஐஸ்க்ரீம், சாக்லேட், கேக்..இப்புடி
எல்லாத்துக்கும் வானமே கடை! அதுக்கும் வானம் ஒரு நேரம் ஒதுக்கி " சிறுவர் நேரம்" என்ற நேரத்தில் வானம்
பொழியும்! அந்த நேரத்தில் சிறுவர்கள் பாடு ஒரே கொண்டாட்டம்தான்!
ஆந்த ஊரில் முனிசிபாலிடிக்காரங்களுக்குத்தான் இராப்பகலா வேலை இருக்கும்.
வானம் உணவு வகைகளை சப்ளை செய்துட்டு கொஞ்ச நேரத்துல மழை பெய்து இயற்கையாவே சுத்தப்படுத்தினாலும்
கூட ஆங்காங்கே இட்லி, தோசை, சிக்கன், மட்டன் அப்டீன்னு கீழ கிடக்கும். அதை எல்லாம் சுத்தப்படுத்துறதுக்குரிய
வாகனங்களைக் கொண்டுவந்து சுத்தப்படுத்தி, அவற்றை எல்லாம் அந்த வாகனத்தின் பின்னால் வரும் லாரியில் எடுத்து
நகரை ஒட்டிய கடலில் கொண்டுபோய் மீன்களுக்கு உணவாகப் போட்டு விடுவார்கள். ஆந்த வேலையைச் செய்ய
வீட்டுக்கு ஒருவர் தினமும் போயாக வேண்டும்.
காலையிலிருந்து இரவு பத்து மணி வரை நகர் துப்புறவுப் பணிக்கு என்று ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
சில சமயங்களில் உணவு மழை புயல் வீசி அதிகமாக பொழிந்து தள்ளி விட்டால் சமயத்தில் ஹெலிகாப்டர் உதவி
கொண்டு எல்லாம் துப்புறவுப் பணி மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
துப்புறவுப் பணி செய்யும்போது சில சமயங்களில் காற்று நூறு மைல் வேகத்தில் அடிக்கும். அப்போதெல்லாம் சுத்தப்
படுத்துகிற வேலை மிகவும் கஷ்ட்டமாக இருக்கும். வானிலைக்கு ஏற்றவாறு அவர்கள் உடை அணிந்திருக்கவேண்டும்.
ஒரு முறை இரவு உணவுக்கு மட்டன், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, ஆஃப் பாயில், ஆம்லெட் என்று மாறி,
மாறிக் கொட்டித் தீர்த்துவிட்டது. ஆனால் பருவ நிலைக் கோளாறால் விடியவிடியப் பெய்து தெருவெங்கும் ஒரு ஆள்
உயரத்துக்கு நிறைந்து காணப்பட்டது. பெரியபெரிய கிரேன்களைக் கொண்டு வாரக் கணக்கில் சுத்தம் பண்ண
வேண்டியிருந்ததால் முட்டை, மட்டன், சிக்கன் நாற்றம் குடலைப் புரட்ட ஆரம்பித்து விட்டது. ஆது போன்ற எதிர்
பாரத சமயங்களில் இந்த நகரத்து மக்களுக்கு அந்த வாழ்க்கை வெறுத்துப் போகும். அப்படி ஒரேயடியாக
வெறுக்க வேண்டிய சூழ் நிலையும் ஒரு நாள் வந்தது!
இன்னும் பொழியும்.....!


<<>>உணவு மழைத் தீவு! -2.<<>>(சிறுவர் தொடர் கதை )




ஒரு நீண்ட மலை; ஒரு பெரிய பாலைவனம்;
ஒரு குட்டிக் கடல்; அந்தக் குட்டிக் கடலில்,
ஒரு குட்டித் தீவு நகரம்.

அந்தக் குட்டித் தீவுக்கு " உணவு மழைத் தீவு " ன்னு பெயர்.

அந்த நகரத்துக்கு இரண்டே தெரு. ஒரு வரிசைக்கு
500 வீடுகள். ஒவ்வொரு வீட்டுக்கு
முன்னாலும் பெரிய பாத்திரம் இருக்கும்.
வீட்டுக்குப் பின்னால் பூந்தோட்டம் இருக்கும்.

ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் செல்லப் பிராணிகளாக
நாயும் பூனையும்!
ஆந்த நகரம் உலகத்துலேயே அதிசயமான நகரமும் கூட;
ஆந்த ஊர்ல யாரும்
வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டியதில்லை.
வீட்டுல சமைக்க வேண்டியதில்லை.
அந்த ஊர்ல இருப்பவங்களுடைய தேவைகளை
வானம் தினமும் மும்மாரி  பொழிந்து பூர்த்தி செய்யும்!

காலையில் எல்லோரும் எழுந்ததும் தங்கள் டி.வி. முன்னால்
உட்கார்ந்து வானிலை
நிலவரம் பற்றிய செய்தியைக் கேட்பார்கள். எப்போ இடி இடிக்கும்?
மழை வரும், என்றுஅறிந்துகொள்வதற்காக உட்காருவதில்லை.

காலையில் எந்த நேரத்தில் காபி? எந்த நேரத்தில் சிற்றுண்டி?
மதிய, இரவு உணவு நேரங்கள்பற்றியதாகத்தான் வானிலை
அறிவிப்பாக இருக்கும். வானிலை அறிவிப்புகள் சில நேரங்களில்
மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் வருத்தம் தருவதாகவும் இருக்கும்.

தினசரி மக்களின் முக்கிய வேலைகளுள் ஒன்று தான் டி.வி.பார்ப்பது.
வானிலை அறிவிப்பு இப்படித்தான் இருக்கும்.

இன்றைய வானிலை அறிவிப்புகளை வழங்குவது உங்கள்
வானதேவன்! இன்று அதிகாலை சரியாக
5மணிக்கு ஒருமணி வேகத்தில் காற்று இல்லாமல் மேகம்
பால் மழை பொழியும்.

சரியாக 5. 5க்கு காபி டிக்காசன், அதைத் தொடர்ந்து தேனீர் டிக்காசன்
மூன்று நிமிடங்கள். பின் பத்து நிமிடங்களுக்கு
தண்ணீர் மழை பொழியும்! அதிகாலைச் சுடு பானம் அருந்துபவர்கள்
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள்
மீண்டும் 6.15க்கு இரண்டு மணி வேகத்தில் காற்று வீசாமல் பால்மழை பொழியும்!

6.20க்கு காபி டிக்காசன், 6.25க்கு தேனீர் டிக்காசன் 6.29க்கு
வடை மழை, தொடர்ந்து இட்லி, தோசை கலந்தும்
தனித்தனியாகவும் 6.33 வரையில் பெய்யும்.

6.40லிருந்து 6.50 வரை தண்ணீர் மழை மணிக்கு முப்பது மைல்
வேகத்தில் பொழியும். இந்த நேரங்களில் யாரும் வீட்டுக்கு வெளியே
வரவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

அடுத்த வானிலை அறிவிப்பு வரை, " வானமே வாழ்க " திரைப்
படத்திலிருந்து ஒரு பாடலை நேயர்கள் கேட்டு மகிழலாம், " என்று
அறிவிப்பு வரும்.

ஆதே போல மதியம், மாலை, இரவு உணவு என்ன? சைவ,
அசைவ உணவுகள், இன்றைய ஸ்பெஷல் போன்ற
அறிவிப்புகள் இடம் பெறும். வெயில் நேரங்களில் அவ்வப்போது சூப்,
ஜூஸ் வகைகள் பொழிவதும் உண்டு.


இன்னும் பொழியும்.....!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது