<<>>உணவு மழைத் தீவு! -5.<<>>(சிறுவர் தொடர் கதை )
சிறுவர் சிறுமிகளுக்கோ
பாதாள அறை வாசத்தை
எண்ணி மகிழ்ச்சி
அடைந்தனர்.
சிலர்,
தாங்கள் பள்ளிக்கு போக முடியாதே என்று
கவலைப்பட்டனர்.
சிறுவர் சிறுமியர் உட்பட அனைவரும் இரண்டு
மூன்று நாளைக்குத் தேவையான உணவை
சேகரித்து வைத்துக்கொள்ள கைகளில் பாத்திரங்களோடு
தயாராக நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது.....
மாலை மணி ஆறு முப்பது. இரவு உணவாக ரவாதோசை, இட்லி , பூரி , சப்பாத்தி , சாம்பார் சாதம் என்று பொழிய ஆரம்பித்தது. எல்லோரும் முடிந்தவரை சேகரித்தார்கள்; சிறிது நேரத்தில் சட்னி மழை பொழிய அதையும் பாத்திரங்களில் பிடித்து பத்திரமாக பாதாள அறைக்கு கொண்டுபோய் வைத்தனர். சிலர் ஒரு வாரத்திற்கு போதுமான உணவைச் சேகரித்து வைத்துக்கொண்டனர். அடுத்த ஓரிரு நாட்கள் எப்படியிருக்குமோ என்ற அச்சத்தில் பலர் இருந்தனர். சிறுவர் சிறுமியர் பாடுதான் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ஒரு வழியாக எல்லோரும் பாதாள அறை வாழ்க்கைக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருந்தபோதுதான் வீடே அதிரும்படியான சத்தம் கேட்டது.
எல்லோரும் பாதாள அறைகளில் இருந்ததால் சத்தம் கூடுதலாகவே கேட்டது. பாதாள அறையிலிருந்த தொலைக்காட்சித் திரையில் எல்லோரின் விழிகளும் பதிந்து கிடந்தது; வானிலை அறிவிப்பாளர் வார்த்தைக்கு வார்த்தை எச்சரிக்கை, பாதுகாப்பு , வெளியே வராதீர்கள் என்று சொல்லி எல்லோர் வயிற்றிலும் புளியைக் கரைத்துக்கொண்டிருந்தார்.
திடீர் திடீர் என மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது வீட்டிலிருந்த சிறுசுகளுக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியது. வீட்டிலிருந்த பெரியவர்கள் மெழுகுவர்த்திகளை தயாராக எடுத்து வைத்துக் கொண்டனர். குழந்தைகளை சாப்பிட்டுவிட்டுத் தூங்கவைத்தனர். வெளியே தீபாவளிப் பட்டாசு வெடி ஓசைகள் போல பட், தட், தடார் என்று வெவ்வேறு ஓசைகள் இடைவெளியின்றி கேட்டவண்ணமிருந்தன;
நேரம் ஆக, ஆக பெரியவர்களுக்கும் தூக்கம் கண்களைச் சுழற்ற உட்கார்ந்த நிலையிலும், சோபாவில் சாய்ந்த நிலையிலும் தூங்கத் துவங்கியிருந்தனர். சிலர் தூக்கம் வராமல் இருக்க தேனீர் கோப்பைகளை கைகளில் எடுத்துக் கொண்டு அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தனர். சிலர் நண்பர்கள், உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் கவலைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தனர்.
திடீரென்று மின் தொடர்பு அறுந்தது. வானமே பெயர்ந்து பூமியில் விழுந்தது போல ஒரு பெரும் ஓசை தூங்கிக் கொண்டிருந்தவர்களை துள்ளி எழச் செய்தது. மெழுகுவர்த்திகள் ஒளி நடனம் புரிய, காரிருள், இரைச்சல், சில்லென்று விழுந்து உடையும் கண்ணாடிகள் எழுப்பும் சத்தம் எல்லாம் கலவையாய் அவர்களின் காதுகளில் விழுந்து இருதயக் கூட்டுக்குள் பொங்கிய அச்சம் முகங்களில் தெரிந்தது.
வீடுகளின் உச்சியில் யாரோ பாறாங்கல்லை உருட்டி விட்டது போல கடகடவென விழுந்து உருளும் சத்தமும் தொடர்ந்து வீட்டுக்கூரை சடசடவென முறிந்து விழும் ஓசையும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைக்கூட எழுப்பிவிட்டது. எழுந்த குழந்தைகள் மிரண்டுபோய் அப்பா, அம்மாக்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ள, உணவு மழைத் தீவில் இருந்த அத்தனை பேரும் உயிர் பிழைப்போமா என்ற அச்சத்தை விதைத்திருந்தது.
அவர்கள் அச்சப்பட்டது போலவே, மறுநாள் பொழுது விடிந்தபோது.....
இன்னும் பொழியும்.....!